பதிவு செய்த நாள்
11
ஏப்
2018
11:04
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, சீராப்பள்ளி மாரியம்மன் கோவிலில், சாட்டையடி வாங்கி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் பண்டிகை கடந்த வாரம், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை, பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வலம் வந்தனர். பின்னர், பூச்சட்டியில் இருந்த நெருப்பை கோவில் முன் கொட்டியவுடன், பக்தர்கள் அதை திருநீராக எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர். தொடர்ந்து சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது.
அருள் வந்த பூசாரி லோகநாதன், பக்தர்களை சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறினாலும், ஏதாவது ஒரு கோரிக்கையை மனதில் நினைத்துக் கொண்டாலும், பூசாரி முன் வந்து கையை துாக்கி வரிசையாக நின்று, சாட்டையடி வாங்குகின்றனர். இந்த வினோத நேர்த்திக்கடன், பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து, சீராப்பள்ளியை சேர்ந்த சுரேஷ் கூறுகையில்,‘‘ சாட்டையடி வாங்கினால் தீமை விலகி, நன்மை நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் வேண்டுதல் இல்லை என்றாலும், பூசாரி கையால் சாட்டையடி வாங்கிக் கொள்கின்றனர்,’’ என்றார். பின்னர், பால்குடம், தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது. நாளை சத்தாபரணம் நடக்கிறது. 14ல், மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவடைகிறது.