விஷூ பூஜைகளுக்கு சபரிமலை நடைதிறப்பு : 15ம் தேதி விஷூக்கனி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2018 12:04
சபரிமலை: சித்திரை மாத பூஜைகள் மற்றும் விஷூக்கனி தரிசனத்துக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. 15-ம் தேதி விஷூ கனி தரிசனம் நடக்கிறது. நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு எந்த பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி நெய் அபிஷேகத்தை தொடங்கி வைப்பார். பின்னர் வழக்கமான பூஜைகள் தொடங்கும். 18-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். உதய அஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலசம் போன்ற பூஜைகளும் நடைபெறும்.சித்திரை ஒன்றாம் தேதி விஷூ கனி தரிசனம் நடப்பது வழக்கம். ஆனால் நட்சத்திர அடிப்படையிலான கணக்கின் படி சித்திரை இரண்டாம் தேதி ஏப்.15-ம் தேதி அதிகாலையில் நடை திறந்ததும் விஷூ கனி தரிசனம் நடக்கிறது. ஏப்.14-ல் சித்திரை பிறக்கிறது. 18-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.