பதிவு செய்த நாள்
11
ஏப்
2018
01:04
ஓமலூர்: வெங்கட்ரமணர் கோவிலில், தொல்லியல் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். காடையாம்பட்டி, காருவள்ளி சின்னதிருப்பதி, வெங்கட்ரமணர் கோவிலில், ராஜ, மூலஸ்தன கோபுரங்கள், அர்த்த மண்டபம், உட்பிரகார தரைத்தளம், சுற்றுச்சுவர் ஆகிய புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. முதல் கட்டமாக, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், உட்பிரகார தரைத்தளத்தை புதுப்பிக்க, ஒப்பந்தம் கோரப்பட்டு, அனுமதி வேண்டி, அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, 100 அடி அகலம், 200 அடி நீளத்தில், தற்போதுள்ள கல் தளப்பகுதியை அகற்றி, புதிதாக அமைக்கப்பட உள்ளது. இதனால், தொல்லியல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள், தரைத்தளத்தில் கல்வெட்டு, தொல்லியல் சார்ந்த சின்னம் உள்ளதா என, சில நாளுக்கு முன் ஆய்வு நடத்தி, அதன் அறிக்கையை, அறநிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். செயல் அலுவலர் திருஞான சம்பந்தர் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன், கும்பாபி ?ஷகம் நடந்தது. உட்பிரகாரத்தில், பக்தர்கள் சுற்றிவர, புதிய தரைத்தளம் அமைக்கும் பணிக்கு, தொல்லியல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விரைவில், ராஜ, மூலஸ்தன கோபுரங்கள், அர்த்த மண்டபங்கள் ஆகியவற்றுக்கு வண்ணம் பூசப்படவுள்ளது. பின், கோவில் கும்பாபி?ஷகம் குறித்து, அதிகாரிகள் ஆலோசனை நடத்துவர், என்றார்.