பதிவு செய்த நாள்
11
ஏப்
2018
01:04
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வீரபத்திர சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 132 கோடி ரூபாய் சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு திருத்தொண்டர் சபை நிறுவனத் தலைவர், ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.ராமநாதபுரம், தாலுகா அலுவலகத்தில் சொத்து விவரங்களை ஆய்வு செய்த பின் அவர் கூறியதாவது: ராமநாதபுரம் வீரபத்திர சுவாமி கோவிலுக்கு, 1895 ஏப்ரலில், 2.90 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்துள்ளனர். அதன் இன்றைய மதிப்பு, 132 கோடி ரூபாய். இந்த இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துஉள்ளனர். அறநிலையத்துறை சொத்துகளை உரிமை மாற்றம் செய்ய, சட்டப்பிரிவு, 36ன் கீழ் ஆணையர் ஒப்புதல் பெற வேண்டும். இங்கு நடந்த விற்பனை எதுவும் அறநிலை யத்துறை ஆணையரால் அனுமதிக்கப்படவில்லை.நில அளவைத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி, மின்வாரியம் நகர் ஊரமைப்புத்துறையினருடன் இணைந்து ஆலோசனை செய்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில், 5.5 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ராமநாதபுரம் சமஸ்தான சொத்துகளை மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.