பதிவு செய்த நாள்
12
ஏப்
2018
10:04
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியநாயகி உடனுறை பெருவுடையார் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் கோவில் வாளகத்தில் ஸ்ரீசந்திரசேகர் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலுக்குள் புறப்பாடாகி, இன்று காலை 7.30 மணி முதல் 8.00 மணிக்குள் மேளா,தாளம் முழுங்க, ஓதுவார்கள் திருமறைமந்திரம் ஓத கொடியேற்றம் நடந்தது.
பின்னர், கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதணை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து 2ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நாளை 13ம் தேதி மாலை சிம்ம வாகனத்தில் விநாயகர் ஊர்வலும், 14ம் தேதி மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் ஊர்வலும், 15ம் தேதி காலை விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரமும், மாலை மேஷவாகனத்தில் சுப்பிரமணியர் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. 16ம் தேதி காலை சுப்பிரமணியர் சுவாமி பல்லக்கில் புறப்பாடும், மாலை சுப்பிரமணியர் சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் ஊர்வலம் நடக்கிறது. 17ம் தேதி காலை சுப்பிரமணியர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரமும், மாலை சைவ சமயாச்சாரியார் நால்வர் புறப்பாடு நடக்கிறது. 18ம் தேதி காலை நால்வர் பல்லக்கில் கோவிலுக்குள் புறப்பாடு, மாலை சூரிய பிரபையில் சந்திரசேகரர் சுவாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, திருவிழாவின் 15ம் நாளான 26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தியாகராஜர் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளி, காலை 5.40 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. தேரோட்டம் 4 ராஜவீதிகளில் சென்று தேர் மண்டபத்தை வந்தடைக்கிறது. வருகிற 29ம் தேதி மாலை கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி புறப்பாடு நடக்கிறது.