சமணர் படுகை பாதை: மத்திய தொல்லியல் துறை சீரமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2018 11:04
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தென்பரங்குன்றம் பகுதியில் உள்ள சமணர் படுகைக்கு செல்லும் மலைப் பாதை சீரமைக்கும் பணியில் மத்திய தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. 300 அடி உயரத்தில் உள்ள இந்த சமணர் படுகைக்கு செல்லும் பாதை பாதை புதர்மண்டி திறந்தவெளி கழிப்பிடமாகவும், பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த கம்பிகள் உடைக்கப்பட்டும் பாழ்பட்டு இருந்தது. இப்பகுதியை சீரமைக்க ஓராண்டிற்கு முன் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு பணிகள் துவங்கின. 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணிகள் இழுத்தடிக்கப்பட்டன.
தற்போது சீரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மலைப்பாதைக்கு செல்லும் வழிப்பகுதியில் கருங்கல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பாறை படிகளில் பக்கவாட்டு இரும்பு கம்பிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சமின்றி மலையில் ஏறிச்சென்று சமணர் குகை மற்றும் படுகைகளை பார்வையிடலாம். மத்திய தொல்லியல் துறையின் அலுவலகம் மதுரையில் இல்லாத நிலையில் இங்குள்ள பல்வேறு சின்னங்களை இரு ஊழியர்கள் மட்டும் பராமரிக்கின்றனர். இந்த மலைப்பாதை விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பாதுகாக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.