பதிவு செய்த நாள்
12
ஏப்
2018
12:04
நாமகிரிப்பேட்டை: ஆர்.புதுப்பட்டி, கோவில் திருவிழாவில் தேருக்கு பின்புறம் உருளுதண்டம் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆர். புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலக்க சூடாமணியம்மன் கோவில் உள்ளது. பங்குனியில், தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். அப்போது, சுற்றுப்பகுதியில் உள்ள, 18 கிராமங்களில் திருவிழா தொடங்கிவிடும். இந்தாண்டு திருவிழா, கடந்த, 8ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று அன்ன வாகனம், மறுநாள் சிம்மவாகனம், கடந்த, 10ல் குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று காலை, தேரோட்டம் தொடங்கியது. முன்னாள் தலைவர்கள் நாமகிரிப்பேட்டை பொன்னுசாமி, ஆர். புதுப்பட்டி சுப்ரமணி, செயல் அலுவலர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் தேர்வடம் பிடித்தனர். பக்தர்கள் உருளுதண்டம் போட்டு, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். சிறிது நேரத்தில் வீடுகளுக்கு முன் கொட்டியிருந்த மண் சாலையில் தேர் சக்கரம் மாட்டிக்கொண்டது. ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு, தேர் வழித்தடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
முகாம் நீதிமன்றம்: திருவிழா நடக்கும், இரு நாட்களும் அரசு துவக்கப்பள்ளியில் முகாம் நீதிமன்றம் நடக்கும். இதில், பண்டிகையின்போது நடக்கும் சிறுசிறு சண்டை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அபாரதம் விதித்து, வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்படும். நேற்று, ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மாலதி முன்னிலையில், விசாரணை நடந்தது.