பதிவு செய்த நாள்
12
ஏப்
2018
12:04
கோவை:இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில், அணையா நெய் தீபம் ஏற்றும் நடைமுறையை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில், பெருத்த சேதம் ஏற்பட்டது. இது போன்ற தீ விபத்துக்களை தடுக்க, தமிழகத்திலுள்ள அனைத்துக் கோவில்களிலும், பக்தர்கள் விளக்கேற்றவும், கற்பூரம் ஏற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்து மக்களின் பாரம்பரிய கலாசாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்கும் வகையில், கோவிலில் அணையா தீபம் ஏற்றி பாதுகாக்க, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவையிலுள்ள அனைத்து கோவில்களிலும், அணையா தீபம் ஏற்றி, வழிபாடு செய்யப்படுகிறது.
பக்தர்கள் எவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும், நிறையும் வகையில் அதற்கான கலன்கள் வைத்து, பிரத்யேகமாக அணையா தீபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிதில் கருகாத திரி போடப்பட்டுள்ளது. கோவை கோனியம்மன் கோவிலில், அணையா தீபம் நேற்று ஏற்றி வைக்கப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் எண்ணெய் ஊற்றி சுவாமி வழிபட்டனர்.
கோவில் செயல் அலுவலர் கைலாஷ் கூறுகையில், அறநிலையத்துறையின் உத்தரவுப்படி, அணையா தீபம் அமைத்துள்ளோம். பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவு செய்ய, எண்ணெய் ஊற்றலாம். தீ விபத்து ஏற்படாமல் இருக்க, தீபத்தை சுற்றி கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது. தீபம் அணையாமல் இருக்க, காற்று சென்று வர துவாரம் விடப்பட்டுள்ளது, என்றார்.
கோவை கோவில்களில்...: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவையில், 1,509 கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக, செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நெய் தீபம் ஏற்றுவர். சில கோவில்களில் எப்போதும் விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாக கொண்டிருப்பர். உக்கடம் நரசிம்மபெருமாள் கோவிலில், இதற்காக பிரம்மாண்ட அளவில் தீப மண்டபம் அமைந்துள்ளது. கோனியம்மன், கோட்டை ஈஸ்வரன், தண்டுமாரியம்மன், மருதமலை சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்துக்கோவில்களிலும், பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.