பதிவு செய்த நாள்
12
ஏப்
2018
03:04
ஆயலுார்: திருவள்ளூர் அடுத்துள்ளது ஆயலுார் ஊராட்சி. அயர்ந்தநல்லுார் என்றழைக்கப்பட்ட இந்த ஊர் ,நாளடைவில் ஆயலுார் என, மாறியது. இங்கு, 500 ஆண்டுகளாக பழமையான சொர்ணாம்பிகை சமேத நீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது.அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த கோவில் பிரதோஷ வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றது எனவும், அகஸ்தியர் முனிவர் பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கோவிலில், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 200 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாகவும், 50 ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது.தமிழக அரசு மூலம், 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு கால பூஜை நடத்த உத்தரவிடப்பட்ட இந்த கோவிலில், தற்போது பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழமையான இந்த கோவிலை புதுப்பிக்க உபயதாரர்கள் மூலம், இரண்டாண்டுகளுக்கு முன், மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அறநிலைய துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மேலும், அப்போதே, திருப்பணிகள் துவங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்துள்ளது. ஆனால், அரசிடமிருந்து எவ்வித உத்தரவும் வராததால், பணிகள் துவங்கப்படவில்லை என, கூறப்படுகிறது.எனவே, விரைவில் இந்த கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அறநிலையத் துறை அலுவலர் கூறுகையில், ஆயலுார் நீலகண்டேஸ்வரர் கோவிலை, தொல்லியல் துறை மூலம் ஆய்வு நடத்தி, திட்ட மதிப்பீட்டுடன் அறிக்கை அனுப்பியுள்ளோம். அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன் கோவிலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்படும், என்றார்.