சிவகங்கை: சிவகங்கை அருகே திருமலையில் சிதைந்து வரும் புராதன சின்னங்களை தொல்லியல்துறையினர் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. திருமலையில் கி.மு. 5 ம் நுாற்றாண்டு பாறை ஓவியங்கள், கி.மு., முதலாம் நுாற்றாண்டு பிராமி எழுத்துக்கள், சமணர் படுகைகள், வட்டெழுத்து கல்வெட்டுகள் மற்றும் கி.பி., 8 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த குடவரை கோயில் உள்ளன. இக்கோயிலில் மலை கொழுந்தீஸ்வரர், பாகம் பிரியா அம்மன் வீற்றிருக்கின்றனர். கோயிலில் கி.பி., 13, 14 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. தமிழகத்தில் திருமலையில் மட்டுமே பாறை ஓவியங்கள் உள்ளன. இக்கிராம இளைஞர்களின் தொடர் முயற்சியால் புராதன சின்னங்கள் உள்ள 16 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக 2016ல் தொல்லியல் துறை அறிவித்தது. திருமலையை சுற்றிலும் புராதன சின்னங்களை சேதப்படுத்தினால் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என, அறிவிப்பு பலகைகள் மட்டும் வைக்கப்பட்டன. அதன்பின் தொல்லியல்துறை கண்டுகொள்ளாததால் புராதன சின்னங்களை சமூகவிரோதிகள் சேதப்படுத்தி வருகின்றனர். கிராம இளைஞர்கள் கூறியதாவது: பாறை ஓவியங்கள், சமணர் படுகைகள் மீது சிலர் பெயின்டால் எழுதிவிட்டு செல்கின்றனர். இதனால் புராதான சின்னங்கள் அழிந்து வருகின்றன. திருமலை புராதன சின்னங்களை பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பயன் இல்லை, என்றனர்.