பதிவு செய்த நாள்
12
ஏப்
2018
03:04
ஆர்.கே.பேட்டை: கிராமத்தினரை வதைத்து, தினசரி விருந்து புசித்து வரும் பகாசூரனுக்கு, இன்று, பீமசேனன் கும்பம் எடுத்து செல்ல உள்ளார். பீமசேனன், உணவு பிரியர் என்பதால், கும்பம் பகாசூரனுக்கு கிடைக்குமா? என்பது இன்று இரவு தெரிய வரும். ஆர்.கே.பேட்டை, திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா துவங்கி, நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்வுகள், இன்று பகாசூரன் கும்பம் நிகழ்ச்சியுடன் துவங்குகின்றன. ஏற்கனவே, மகாபாரத சொற்பொழிவு நடந்து வரும் நிலையில், இன்று இரவு முதல், தெருக்கூத்து நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. முன்னதாக இன்று மாலை, பகாசூரன் கும்பம் நிகழ்ச்சி நடைபெறும். அஞ்சாத வாசம் மேற்கொண்டுள்ள பாண்டவர்கள், தங்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளவர்களை, பகாசூரனின் கொடுமையில் இருந்து மீட்கும் விதமாக, பீமசேனன், பகாசக்ஷரனுக்கு கொண்டு செல்ல முன்வருகிறார். இதற்காக, கிராமத்தில், வீடுதோறும் கும்ப படையல் சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக, ஆர்.கே.பேட்டையில் இன்று, பக்தர்கள் தங்களின் வீடுகளில் கும்பம் படைத்து, மாட்டு வண்டியில் வீதியுலா வரும், பீமசேனனிடம் வழங்க காத்திருக்கின்றனர். பீமசேனன், உணவு பிரியர் என்பதால், கும்பம் பகாசூரனுக்கு சென்று சேருமா என்பதும், பகாசூரனின் அட்டகாசத்திற்கு பீமசேனன் முடிவு கட்டுவாரா என்பதும், இன்று இரவு தெரிந்து விடும்.