பதிவு செய்த நாள்
13
ஏப்
2018
10:04
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள, ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், ஸ்ரீராமானுஜரின், 1001ம் ஆண்டு திருஅவதார விழா நேற்று துவங்கியது. இதில், தங்கப்பல்லக்கில், ராமானுஜர் திருவீதி உலா சென்று அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு அவதரித்தவர், வைணவ மகான் ஸ்ரீராமானுஜர். இவர், சமய, சமூக, சமுதாய சீர்திருத்தங்களை அந்த காலத்திலேயே ஏற்படுத்தியவர்.ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.இங்கு, ஆண்டு தோறும் சித்திரை, திருவாதிரை நட்சத்திரம் அன்று ராமானுஜரின் திரு அவதார உற்சவ விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, ராமானுஜரின், 1001ம் ஆண்டு திரு அவதார உற்சவ விழா நேற்று துவங்கியது.
காலை, 4.30, மணிக்கு மஞ்சத்திலிருந்து சுவாமி புறப்பட்டு, தங்க மண்டப ஊஞ்சலை சென்றடைந்தார். இதையடுத்து, ஒய்யார நடையில், வாகன மண்டபத்திலிருந்து, தங்கப் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடந்தது. அதன் பின், நான்கு மாட வீதிகளில் சுவாமி திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மதியம், ராமானுஜருக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு,திருமஞ்சனம் ஈரவாடை தீர்த்தம், திருமண்காப்பு திவ்ய பிரபந்த சேவை சாத்துமுறை தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மாலை, மங்களகிரி வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 11:00 மணி முதல், 12:00 மணி வரை ஏகாந்த சேவை நடைபெற்றது. காலை முதல் இரவு வரை நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.