பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
12:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தீபம் ஏற்றுவதற்கு என, விளக்கு மாடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில், பிப்., 2ல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், தீத் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதன்படி, காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் உள்ள ஊழியர்கள், அர்ச்சகர்கள், அன்னதான கூட பணியாளர்களுக்கு, தீயணைப்புத் துறையினர், தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.
இந்நிலையில், முதுநிலை அந்தஸ்து உள்ள பெரிய திருக்கோவில்களில் தீத்தடுப்பு நடைமுறை பாதுகாப்பு முறைகள் குறித்து, உடனடியாக தணிக்கை செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், கொடிமரம் மற்றும் கோவிலின் பிற சன்னதிகளின் முன், தீபமேற்ற தடை விதிக்கப்பட்டு, தீத்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்காக, கொடி மரம் அருகே, விளக்கு மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் தீபமேற்றுகின்றனர். ஆனால், வரதராஜ பெருமாள் கோவிலில், கொடிமரம் அருகே விளக்கு மாடம் எதுவும் இல்லாததால், பக்தர்கள் பலிபீடம் மற்றும் கொடிமரம் அருகில் தீபம் ஏற்றுகின்றனர். இதனால், அங்குள்ள கல்வெட்டு மற்றும் சிற்பங்களில், எண்ணெய் பிசுக்கு படிமங்களாக காட்சியளிக்கிறது. மேலும் சிலர், கீழ்புறத்தில் தீபம், கற்பூரம் ஏற்றுவதால், பக்தர்களின் ஆடைகளில் தீப்பிடிக்கும் நிலை உள்ளது. எனவே, கொடி மரம் அருகே, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய, விளக்கு மாடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.