பதிவு செய்த நாள்
23
ஏப்
2018
11:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தில், வெயிலுக்காக போடப்பட்டுள்ள மிதியடி யின் மீது, தண்ணீர் ஊற்றவேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மார்ச் மாதம் துவங்கியதில் இருந்தே, காஞ்சி புரத்தில், வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகலில் அனல் காற்று வீசுகிறது. வெயிலில் நடமாடுவோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் கோவில் பிரகாரங்களில், பக்தர்களின் வசதிக்காக ‘மேட்’ எனப்படும் மிதியடி அமைக்கப்பட்டது. காஞ்சியில், 100 டிகிரிக்கும் மேல், வெயில் வெளுத்து வாங்குவதால், இரு கோவில்களிலும், மிதியடிக்கு பதிலாக, வெப்பத்தை குறைத்து, குளிர்ச்சியை தரும் வேதிப்பொருட்கள் அடங்கிய, ‘கூல் புரூப் பெயின்ட்’ வெளிப்பிரகாரத்தில் அடித்துள்ளனர்.
எவ்வளவு வெயில் அடித்தாலும், இதில், நடந்து செல்லும்போது, பக்தர்களின் பாதங்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால், காமாட்சியம்மன் கோவிலில், மிதியடி மட்டுமே உள்ளது. இதில், சூடு ஏறாமல் இருக்க, இதன் மீது, கோவில் ஊழியர்கள் அடிக்கடி தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருப்பர். இதனால், மிதியடியில் நடந்து செல்லும்போது, பக்தர்களின் பாதங்களுக்கு இதமாக இருக்கும். கடந்த சில நாட்களாக, மிதியடியின் மீது தண்ணீர் ஊற்றாததால், காஞ்சிபுரத்தில் அடிக்கும் வெயிலுக்கு மிதியடியும் சூடாக உள்ளது. இதனால், கோவில் பிரகாரத்தில் வலம் வரும் பக்தர்கள், ஓட்டம் பிடிக்கின்றனர். இது குறித்து, வில்லி வாக்கத்தைச் சேர்ந்த மென்பொறியாளர், ஆர்.உமா சங்கர் என்பவர் கூறியதாவது: பள்ளிகளுக்கு விடுமுறையால், காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில், சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்துள்ளேன். கோவில் பிரகாரத்தில் போட்டுள்ள மிதியடியில் தண்ணீர் ஊற்றாததால், நேற்றைய வெயிலுக்கு, குழந்தைகளுடன், நான் ஓடி வந்த போது, எனக்கு, கோவில் திருவிழாவில், தீ மிதித்ததை போன்ற உணர்வு ஏற்பட்டது. எனவே, மிதியடி மீது நன்றாக தண்ணீர் ஊற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.