திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் பராமரிப்பின்றி சுப்பிரமணிய சுவாமி கோயில் சரவணப்பொய்கையில் துர்நாற்றம் வீசும் தண்ணீரால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இப்பொய்கையில்இருந்து தினமும் தீர்த்தம் எடுத்துகோயில் கொடி மரம், பலி பீடத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. கொடியேற்ற திருவிழாக்களில் பொய்கை நீரில் சுவாமி தீர்த்த உற்ஸவம் நடக்கும். இப்பொய்கையில் அப்பகுதியினர் துணி துவைத்தும், குளித்தும் வருகின்றனர். சோப்புகளின் கவர்கள், சீகைக்காய், ஷாம்பு பாக்கெட் பிளாஸ்டிக் கழிவுகள், பழைய துணிகளை மக்கள் தண்ணீரில் விட்டுச் செல்கின்றனர்.இதனால் பொய்கை நீர் பச்சை நிறத்தில் உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. சில மாதங்களுக்கு முன் சுற்றுலா, அறநிலைய துறை செயலர் அபூர்வா வர்மா பொய்கையை பார்வையிட்டு புனிதமாக வைத்துக் கொள்ள உத்தரவிட்டார். பக்தர்கள் துணி துவைக்க மாற்று ஏற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தினார். அவரது அறிவுறுத்தலை கோயில் மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.