பதிவு செய்த நாள்
26
ஏப்
2018
11:04
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் பகவதி அம்மன் கோவிலின் பூரம் திருவிழாவில், குடை மாற்றும் நிகழ்ச்சி, பார்வையாளர்களை ஆச்சர்யப்பட வைத்தது.கேரளாவில் நடக்கும் விழாக்களில், திருச்சூர் பூரம் திருவிழா பிரசித்தி பெற்றது. கொச்சி சமஸ்தானத்தை ஆட்சி செய்த, ராஜா ராமவர்மா காலத்தில் இருந்து, விழா துவங்கியது.திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், சித்திரை மாதம், பூரம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு, நான்கு நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
நேற்று வடக்குநாதர் கோவில் வாயிலில், பெருவனம் குட்டன் மாராரின் தலைமையில், இலஞ்சித்திரை மேளவாத்தியங்கள் களைகட்டின.இதன்பின், திருவம்பாடி பகவதி அம்மன், பரமேக்காவு அம்மன் கோவிலை சேர்ந்த, அலங்கரிக்கப்பட்ட, 30 யானைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, தேக்கின்காடு மைதானத்தில் நிறுத்தப்பட்டன. யானைகளின் மீது இருந்தவர்கள், வண்ணக்குடை மாற்றும் நிகழ்ச்சியை நடத்தினர்.திருவிழாவை காண, கேரள மாநிலம் மட்டுமல்லாமல், தமிழகம், கர்நாடகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான பார்வையாளர்கள், இங்கு குவிந்தனர். போலீசார், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர். இரவு, 11:00 மணி வரை, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இன்று, வாணவேடிக்கை, பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நிகழ்ச்சி நிறைவு அடைகிறது.