பரமக்குடியில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2018 10:04
பரமக்குடி, பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள்(அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று அதிகாலை 2.00 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். கோயில் வெளியில் வந்த அழகர் காவல் தெய்வம் கருப்பண்ணசாமியிடம், விடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தீவட்டிகள் வெளிச்சத்தில், வாண வேடிக்கைகள், மேள, தாளம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க வைகை ஆற்றில் இறங்கினார். அழகர் பச்சை பட்டு உடுத்தி வந்தார்.இதனால் நல்ல மழை பெய்து வளம் பெருகும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.