பதிவு செய்த நாள்
02
மே
2018
11:05
உளுந்துார்பேட்டை:கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெரு விழாவில் திருநங்கைகள் தாலி கட்டி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று காலை அரவான் தேரோட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெரு விழா, கடந்த 17 ம் தேதி துவங்கியது. இவ்விழாவையொட்டி கூவாகம், கூவாகம் காலனி, தொட்டி, நத்தம், அண்ணா நகர், சிவலிங்ககுளம், பாரதிநகர் உள்ளிட்ட 7 கிராமங்களில் இருந்து பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, கோவிலில் வைத்து ஸ்ரீமாரியம்மனுக்கு படையலிட்டனர். அப்போது சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
மறுநாள் (18ம் தேதி) பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், 19 ம் தேதி சந்தனு சரிதம், 20 ம் தேதி பீஷ்மர் பிறப்பு, 21 ம் தேதி தர்மர் பிறப்பு, 22ம் தேதி பாஞ்சாலி பிறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. அதனை தொடர்ந்து 23ம் தேதி பகாசூரன் வதம், 24ம் தேதி பாஞ்சாலி திருமணம், 25ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு, 26ம் தேதி ராஜசூய யாகம் நிகழ்ச்சிகளும், 27ம் தேதி வெள்ளிக்கால் நடுதல், 28ம் தேதி கிருஷ்ணன் துாது, 29 ம் தேதி அரவான்பலி- கூத்தாண்டவருக்கு பாலாலயம், 30 ம் தேதி கம்பம் நிறுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய திருவிழாவான சுவாமிக்கு திருக்கண் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மும்பை, சென்னை, டில்லி, கல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் வந்து, பூசாரிகளின் கைகளால் தாலி கட்டிக் கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
இன்று(2ம் தேதி) காலை 6.30 மணிக்கு அரவான் தேரோட்டம் நடந்தது. நத்தம், தொட்டி வழியாக தேர் பந்தலடிக்கு சென்றடைகிறது. அங்கு பகல் 12:00 மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில், திருநங்கைகள் தாங்கள் அணிந்துள்ள தாலிகளை அறுத்தெறிந்து, விதவை கோலம் பூண்டு அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்துவிட்டு, தங்கள் ஊருக்கு திரும்புகின்றனர். மாலை 5:00 மணிக்கு உறுமை சோறு(பலி சாதம்) படையல் நடக்கிறது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு காளிக்கோவிலில், அரவான் உயிர்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அரவான் சிரசு மட்டும் பந்தலடிக்கு கொண்டு வரப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு நத்தம், தொட்டி வழியாக கோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து 3ம் தேதி விடையாத்தியும், 4ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன,் சித்திரை பெரு விழா நிறைவு பெறுகிறது.