பதிவு செய்த நாள்
03
மே
2018
11:05
அவிநாசி: உஜ்ஜயினி, மகா காலேஸ்வரருக்கு நடக்கும் ருத்ர யாகத்துக்கு, கிரீடம், ஏலக்காய் மாலை, மலர் மாலைகள், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தயாரித்து எடுத்து செல்லப்படுகின்றன. மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயினி, மகா காலேஸ்வரர் கோவில் மற்றும் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள ஓம்காரேஸ்வரர் கோவில்களில், 5 மற்றும் 8ம் தேதிகளில், மகா ருத்ராபிஷேகம் நடக்கிறது.
சிறப்பு பூஜைகள்: இதற்காக, அவிநாசியிலுள்ள, ஸ்ரீ தர்மசாஸ்தா காசி யாத்திரை குழு சார்பில், தாமரை தண்டு, விதை, ருத்ராட்சம் கொண்டு உருவாக்கப்பட்ட மலர்க்கிரீடம், பாதாம் மாலை, ஏலக்காய் மாலை ஆகியவை, அவிநாசியில் தயாரிக்கப்பட்டுள்ளன.இது குறித்து, குழு ஒருங்கிணைப்பாளர் ஆரூர சுப்ரமணிய குருக்கள் கூறியதாவது: பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் பிரசித்தி பெற்ற, உஜ்ஜயினி மகா காலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இக்கோவிலில், 5ம் தேதி, ருத்ரா அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
கருந்துளசி: இதற்காக, மகா காலேஸ்வரருக்கு அணிவிக்க, தாமரை தண்டுகளால் கிரீடம், பாதாம் பருப்பு, ஏலக்காய், கருந்துளசி, வெட்டிவேர் ஆகியவற்றில் மாலைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.ஏழு புண்ணிய நதிகளில் ஒன்றான, நர்மதா நதியின் கரையில் அமைந்துள்ள ஓம்காரேஸ்வரர் கோவிலிலும், இதே போல் பூஜை நடத்துகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.