பதிவு செய்த நாள்
07
மே
2018
11:05
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி விழாவில், காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.
திருத்தணி பழைய திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கடந்த மாதம், 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மூலவருக்கு சந்தன காப்பு, மதியம், மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகம் மற்றும் உற்சவர் அம்மன் வீதியுலா வந்தது. இந்நிலையில் நேற்று, 18ம் நாளில், காலை, 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், துரியோதனன் படுகளம் நடந்தது. நிகழ்ச்சியில், துரியோதனை படுகளம் பகுதிக்கு இழுத்து வந்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின், துரியோதனன் ரத்தத்தால் திரவுபதியம்மன் கூந்தல் முடிக்கப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். சிலர், ஆடு, கோழி பலியிட்டும் வழிபட்டனர்.
காலை, 11:50 மணிக்கு, அக்னி குண்டத்தில் தீ முட்டும் நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு, பூங்கரகம் ஊர்வலத்துடன், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீ மிதித்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என, பக்தி முழக்கமிட்டனர். பின், வாண வேடிக்கைகள், உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, காலை, 11:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. தீமிதி திருவிழாவில், அரக்கோணம் எம்.பி., அரி, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், தி.மு.க., நகர செயலர், பூபதி உட்பட பலர் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றதால், திருத்தணி டி.எஸ்.பி., சேகர் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.