பதிவு செய்த நாள்
09
மே
2018
12:05
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது: மேல்மலையனுார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, செஞ்சி பேரூராட்சி மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம், தற்காலிக பஸ் நிலையம், கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
போக்குவரத்துத்துறை மூலம் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். முழு சுகாதார திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியலறை ஏற்படுத்த வேண்டும். மின்வாரியத்தின் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வபோது ஏற்படும் மின் தடைகளை சரிசெய்ய வேண்டும். விழாக்காலங்களில் இரண்டு நாட்களிலும் மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, அமாவாசை தினங்களில் கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலையங்களில் சி.சி.டி.வி., மூலம் கண்காணிக்கப்பட்டு, பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மூலம் மருத்துவக்குழு மற்றும் அவசர ஊர்திகள் கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சுப்பிரமணியன் பேசினார். அப்போது, டி.ஆர்.ஓ., பிரியா, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் மற்றும் பி.டி.ஓ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.