பதிவு செய்த நாள்
10
மே
2018
01:05
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தில், பழமை வாய்ந்த ஆற்காடு மாரியம்மன் கோவிலில், பிளேக் மாரியம்மன், மதுரைவீரன், முனீஸ்வரர் ஆகிய சிறு கோவில்கள் உள்ளன. இக்கோவிலின், 111ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி, பூச்சாட்டுடன் துவங்கியது. அதை தொடர்ந்து சக்தி கரகம், பூவோடு அழைத்தல், மதுரை வீரன் அழைப்பு, அம்மன் ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை மைதானம் மாரியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி, விமான வாகனத்தில் வந்தனர். முதுகில் அலகு குத்திய பக்தர்கள், நடந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பிளேக் மாரியம்மன் கோவில் அம்மன் ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தது. மாவிளக்கு ஏற்றி, பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.