பதிவு செய்த நாள்
17
மே
2018
01:05
திருச்சி: பழநி முருகன் கோவிலுக்கு உற்சவர் சிலை செய்ததில், 4.2 கிலோ தங்கம் மோசடி செய்த வழக்கில் சிக்கி, தலைமறைவாகியுள்ள, ஓய்வு பெற்ற, ஹிந்து சமய அறநிலைத்துறை கமிஷனரை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பழநி முருகன் கோவிலுக்கு, தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனராக இருந்தவர், தனபால். இவரதுபணிக்காலத்தில், உற்சவர் சிலை புதிதாக செய்யப்பட்டது.
இந்த சிலைக்கு பயன்படுத்தப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.அதன்படி, அவர்கள் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், 4.200 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக, ஸ்தபதி முத்தையா உட்பட நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், முறைகேடு நடந்த காலகட்டத்தில், ஹிந்து சமய அறநிலைத்துறை கமிஷனராக இருந்த தனபாலை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணைக்கு வரும்படி, சம்மன் அனுப்பினர். இருமுறை சம்மன் அனுப்பியும், அவர் விசாரணைக்கு வரவில்லை. இதனால், தனபாலை கைது செய்ய, ஏ.டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில், தனிப்படை அமைத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து தனபால் வீடு உள்ள, பட்டுக்கோட்டை மூத்தாக்குறிச்சி கிராமத்துக்கு போலீசார் சென்றபோது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. போலீசாரால் கைது செய்யப்படுவோம் என்பதை தெரிந்து கொண்ட தனபால், நேற்று முன் தினம் முன்ஜாமின் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் அரசின் உயர் பொறுப்பில் இருந்த ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உட்பட, ஹிந்து சமய அறிநிலைத்துறை அதிகாரிகள் பலரும் சிக்குகின்றனர் என, போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.