காரைக்குடி: காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழா கடந்த 8ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை 8:30 மணி, இரவு 9:-00 மணிக்கு காமதேனு, அன்னம், கைலாசம், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 15–ம் தேதி நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை யானை வாகனத்தில் அம்பாள் வீதி உலா வந்தார். அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது. தெப்பத்திருவிழா மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிேஷகத்துடன் தொடங்கியது. 6:00 மணிக்கு நாதஸ்வர கச்சேரி நடந்தது. இரவு 11:00 மணிக்கு தெப்பத்தில் அம்பாள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெகன்னாதன் தலைமையில் உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் பிரதீபா செய்திருந்தனர்.