சின்னமனுார், சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலை பழமை மாறாமல் திருப்பணி மேற்கொள்ள தொல்லியல்துறை அறிவுறுத்தியுள்ளது. சின்னமனுாரில் ஆயிரத்து 150 ஆண்டுகள் பழமையான சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் உள்ளது. 2007 ஜனவரியில் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்தாண்டு ஜன., 21ல் 12 ஆண்டுகள் நிறைவடைவதால், அதற்குள் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் ரூ.67 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டது. அறநிலையத்துறையினரின் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகள் முடங்கின. கடந்த மாதம் தொல்லியல் துறையினர் கோயிலை பார்வையிட்டனர்.
மிகவும் பழமையான கோயில் என்பதால் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 30 நெறிமுறைகளை வகுத்தனர். அதன்படி பழமை மாறாமல் பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. சுவாமி, அம்மன் கருவறைகளில் தரைதளம் பக்கவாட்டு பகுதியில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை முற்றிலுமாக அப்புறப்படுத்துவது, துாண்களில் சிற்பங்களின் மீதுள்ள சுண்ணாம்பு பூச்சுகளை நீக்கி ரசாயனம் கலக்காமல் தெளிப்பு முறையில் சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள ஏராளமான நிதி தேவைப்படும் என்பதால், பழநி, மதுரை மீனாட்சி கோயில்களில் இருந்து அதற்கு உதவி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.