பதிவு செய்த நாள்
21
மே
2018
02:05
திருப்பதி : திருமலை, திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகரின் குற்றச்சாட்டுகளுக்கு, தேவஸ்தான செயல் அதிகாரி நேற்று விளக்கமளித்தார். ஆந்திராவில் உள்ள, திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலின் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், சென்னையில், தேவஸ்தானத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து, புகார் தெரிவித்துஇருந்தார். இந்த புகார்களுக்கு, தேவஸ்தான செயல் அதிகாரி, அனில்குமார் சிங்கால் விளக்கமளித்துள்ளார். திருமலையில் நேற்று அவர் கூறியதாவது: ஏழுமலையானுக்கு தினசரி கைங்கரியங்கள், ஆர்ஜித சேவைகள், திருமலை சின்ன ஜீயர் மற்றும் பெரிய ஜீயர் முன்னிலையில், எவ்வித குறையும் இல்லாமல் நடந்து வருகிறது.
கடந்த, 1952ம் ஆண்டு முதல், ஏழுமலையான் ஆபரணங்கள் தேவஸ்தானத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதிலிருந்து, பாதுகாப்பாக உள்ளன. அதை ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடும், நீதிபதி ஜெகன்நாதராவ், நீதிபதி வாத்வா கமிட்டிகளின் அறிக்கைகளில், இதுகுறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஏழுமலையானுக்கு நடத்தப்படும் ஆர்ஜித சேவைகளும் தேவஸ்தான தொலைகாட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். கடந்த, 2001ல் நடந்த பிரம்மோற்சவத்தின் கருடசேவையின் போது, மலையப்பஸ்வாமிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆபரணத்தில் உள்ள சிகப்பு கல், பக்தர்கள் சில்லரை நாணயங்களை வீசியதால், உடைந்து விழுந்தது. இந்த விபரம், தேவஸ்தான திருவாபரண பதிவேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. உடைந்த கற்கள், நகைகள் பாதுகாவலரிடம் பாதுகாப்பாக உள்ளது. பக்தர்களிடம் ஆலோசனைகள் பெற்று, தேவஸ்தானத்தின் செயல்பாடுகளை மெருகேற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வறு அவர் கூறினார்.