பதிவு செய்த நாள்
22
மே
2018
12:05
புதுச்சேரி: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவையொட்டி, தேர் தயார் செய்யும் பணியும், தெப்ப உற்சவத்திற்காக குளத்தில் நீர் நிரப்பும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. வில்லியனுார் கோகிலாம்கை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக, கடந்த 10ம் தேதி கோவில் உள் வளாகத்தில், பிடாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 19ம் தேதி இரவு 8:30 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. இன்று,பாரிவேட்டையும், 24ம் தேதி ரிஷபம், மயில் மற்றும் வெள்ளி யானை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும், 26ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. முக்கிய விழாவான தேர்த் திருவிழா வரும் 27ம் தேதி காலை 7:30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. விழாவையொட்டி, கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தேரை தயார் செய்யும் பணி நடக்கிறது. தேரை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பிளேட்கள் அகற்றப்பட்டுள்ளது. தேரில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. தேர் திருவிழாவைத் தொடர்ந்து, தெப்ப திருவிழா நடக்கவுள்ளது. அதற்காக, கோவிலின் குளத்தில் நீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.