செஞ்சி: அஞ்சாஞ்சேரி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. செஞ்சி தாலுகா, அஞ்சாஞ்சேரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 22ம் தேதி மாலை நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 18ம் தேதி மாரியம்மன் மற்றும் சோலைவாழியம்மன் கோவிலில் பொங்கலிட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு மேளதாளம் வானவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து வந்தனர். தொடர்ந்து 22ம் தேதி மாரியம்மன் சோலையம்மன் மற்றும் கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் மாரியம்மன், சோலையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேரில் ஏற்றி வடம் பிடித்தனர். பூங்கரகத்துடன் தேர்பவனி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.