பதிவு செய்த நாள்
25
மே
2018
12:05
கோத்தகிரி: கோத்தகிரி கிருஷ்ணாபுதுார் பட்டதுளசியம்மன் கோவில் விழாவை ஒட்டி, உற்சவ மூர்த்தி திருவீதி உலா நடந்தது.கோத்தகிரி கிருஷ்ணாபுதுார் பட்டதுளியம்மன் கோவில், 28வது ஆண்டு திருவிழா, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
விழாவில், ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் மூலம், அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்கார வழிபாடு நடந்தது. இவ்விழாவின் ஒரு கட்டமாக, உற்சவ மூர்த்தி திருவீதி உலா நேற்று நடந்தது. நேற்று காலை, 7:00 மணிமுதல், 9:00 மணிவரை அம்மனுக்கு சிறப்பு அலங்கார மலர் வழிபாடும், காலை, 9:30 மணிமுதல், 10:30 மணிவரை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி சிலை, திருவீதி உலா நடந்தது. மாலை, 4:30 மணிமுதல், 6:00 மணிவரை பட்டத்துளசியம்மனை கரை சேர்த்து, ஆற்றங்கரையில் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 30ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.