பதிவு செய்த நாள்
05
ஜூன்
2018
12:06
திருத்தணி: திருத்தணி, அக்கையாநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, நேற்றுடன் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இதையடுத்து, மகா சண்டி ஹோமம் நேற்றுமுன்தினம் நடந்தது. கோவில் வளாகத்தில், மகா யாகசாலை அமைத்து, 18 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து புண்ணியவாசம், கோ பூஜை, கலச ஸ்தாபனம், நவகிரகம், துர்கா, மகாலட்சுமி போன்ற ஹோமங்கள் நடந்தன. நேற்றுமுன்தினம், காலை, 9:00 மணிக்கு, கலச அலங்காரம், சண்டி ஆவாரண பூஜை, தொடர்ந்து சண்டி ஹோமம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர்.