பதிவு செய்த நாள்
09
ஜூன்
2018
11:06
பல்லடம்: பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் ஸ்ரீ உலகேஸ்வர சுவாமி கோவிலில், பாலாலய கும்பாபிஷேக பூஜை நடந்தது. பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, அல்லாளபுரத்தில், பழமை வாய்ந்த உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ உலகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. புகழ்பெற்ற இக்கோவில், பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல், சிதிலமடைந்து வருகிறது. கும்பாபிஷேகம் நடத்தி கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதன்படி, கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கோவிலின் மூல ஸ்தானத்தில் இருந்து, தற்காலிகமாக அமைக்கப்பட்ட இருப்பிடத்துக்கு, பாலாலயம் எனப்படும் இறைவன் பிரதிஷ்டை நேற்று நடைபெற்றது. முன்னதாக, நேற்று முன்தினம் விநாயகர் பூஜை, புண்யாஹவாசம், வாஸ்து சாந்தி பூஜை, மற்றும் பல்வேறு வேள்விகள் நடந்தன. நேற்று காலை, இரண்டாம் கால வேள்வியுடன் துவங்கி, உண்ணாமுலையம்மன் உலகேஸ்வர சுவாமி, மற்றும் விநாயகர் உள்ளிட்ட அனைத்து பரிவார தேவதைகளுக்கும், பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.