பதிவு செய்த நாள்
19
ஜன
2012
11:01
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தேவராடிபாளையம் கிராமத்தில், பூப்பொங்கலன்று அனைத்து வீட்டுக்கும், சலங்கை மாடு வந்து சென்றதை ஒட்டி, மஞ்சள் நீராட்டு விழா வெகு விமரிசையாக நடந்தது. கிணத்துக்கடவில் இருந்து மூன்று கி.மீ., தூரத்தில் கோடங்கிபாளையம் ஊராட்சியில் தேவராடிபாளையம் உள்ளது. இங்கு பலதலைமுறைகளாக பொங்கல் விழாவில் வரும் மூன்று நாட்களில், பசு மாடு கன்று ஈன்றினால், அந்த மாட்டை அடுத்த ஆண்டு வரும் மாட்டு பொங்கலன்று, கன்று ஈன்றிய வீட்டுக்கு சொந்தமான தாய்மாமன் வீட்டிற்கு அழைத்து செல்லப்படும். அங்கு தாய்மாமனுக்கும், அவரது குடும்பத்திற்கும் புத்தாடைகள் எடுத்து கொடுத்து, விருந்து வைத்து, மாட்டின் இரண்டு காதுகளில் கத்தியால், மூன்று கீறல் போடப்படுகிறது.அதனால், சாமிக்கு மாடு அர்ப்பணிக்கப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். மாட்டிற்கு மஞ்சள் துணியை கழுத்தில் கட்டியும், சலங்கை கட்டிய பின் மஞ்சள் நீர் ஊற்றப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் பூப்பொங்கல் அன்று சலங்கை மாட்டுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவது இக்கிராமத்தின் வழக்கம். அதன்படி, நேற்றுமுன்தினம் காலை 6.00 மணியளவில், தேவராடிபாளையம் கிராமம் மைதானத்தில் சலங்கை மாடுகள் நிறுத்தப்பட்டன. பின், கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டிற்கும் மாடுகள் வீதி வாரியாக பிரிக்கப்பட்டு மதியம் 2.00 மணி வரை வீடு வீடாக சென்றது. சலங்கை மாட்டை வீட்டிற்குள் அழைத்து சென்று மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்தனர். பின், குடும்பத்தினர் மீது ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மதியம் 2.00 மணிக்கு மேல், இவற்றை அழைத்துக் கொண்டு, பொதுமக்கள் அருகில் உள்ள கோதவாடி மாலை கோவிலுக்கு சென்றனர். அங்கு மாட்டிற்கு வழிபாடு செய்த பின், மீண்டும் மாலை 5.00 மணிக்கு தேவராடிபாளையம் கிராமத்திற்கு அழைத்து வந்து, மைதானத்தில் விடப்பட்டது. பின், மாட்டுக்கு சொந்தக்காரர் மாட்டை வீட்டிற்கு அழைத்து சென்ற பின், பொதுமக்கள் சார்பில், கும்மிப்பாட்டு, ஒயிலாட்டம் போன்ற விளையாட்டுகளும் நடந்தன.