பதிவு செய்த நாள்
15
ஜூன்
2018
10:06
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி பிரமோத்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக திருஞானசம்பந்தருக்கு முத்துப்பந்தல் அளித்து சிவபெருமான் வரவேற்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
காவிரியின் தென்கரையில் அமைந்த தேவாரப்பாடல் பெற்ற 22 வது தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு பெற்றது பட்டீஸ்வரமாகும். தேவலோகப்பசுவான காமதேனுவின் பெண்மக்கள் நால்வருள் பட்டி என்பவள் இக்கோயிலில் இறைவனை நாள்தோறும் பூஜித்து முக்தி பெற்றதால் பட்டீஸ்வரம் என அழைக்கப்பட்டது. சைவ, சமய இளஞாயிறாம் திருஞானசம்பந்தர் தம்முடைய அடியார் திருக்கூட்டனத்தினரோடு காவிரியின் தென்கரை தலங்களைத் தரிசித்து வரும்போது, பட்டீஸ்வரம் கோயிலுக்கு ஈசனை வழிபட எண்ணி வருகையில் நண்பகல் நேரமாக இருந்ததால் வெப்பம் அதிகம் இருக்கும் என்பதால் ஈசன் தன்னைய பூதணங்களை ஏவி திருஞானசம்பந்தருக்கு முத்துபந்தல் அளித்து அழைத்து வருமாறு பணித்தார். அப்படி அழைத்து வரும்போது திருஞானசம்பந்தரின் அழகை காண வேண்டும் என ஈசன் கூறியதால், இத்தலத்தில் நந்திபெருமாகின் விலகி இருக்கும் காட்சி இன்றளவும் காணப்படுகிறது.
இத்தகைய சிறப்புகள் பெற்ற இத்தலத்தில் ஆண்டுதோறும் வைகாசி பிரமோத்சவம் நடைபெறவது வழக்கம். அதன்படி இவ்விழா கடந்த 13ம் தேதி காலை திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் அளித்து ரிஷப வாகனத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து நேற்று (14-ம் தேதி) காலை 7 மணிக்கு சுவாமிக்கு முத்துக்கொண்டை, முத்துக்குடை, முத்துச்சின்னங்கள் அளித்து படிச்சட்டத்தில் வீதியுலா வருதல், இரவு மின் அலங்காரத்துடன் அழகிய முத்து திருஓடத்தில் திருஞானசம்மந்தர் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய திருநாளான இன்று காலை 7.30 மணிக்கு திருஞானசம்பந்தர் திருமடாலயத்திலிருந்து திருமேற்றழிகை, கைலாசநாதசுவாமி திருக்கோயிலுக்கு அழகிய முத்துப்பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து காலை 10 மணிக்கு அங்கிருந்து திருசக்திமுற்றம் சக்திவனேஸ்வரசுவாமி திருக்கோயிலுக்கு முத்துப்பல்லக்கில் அடியார்கள் புடைசூழ வந்த தரிசித்தலும் நடைபெறுகிறது. பின்னர் மதியம் 12 மணிக்கு திருசக்திமுற்றம் சக்திவனேஸ்வரசுவாமி திருக்கோயிலில் இருந்து தேனுபுரீஸ்வரர் வழங்கியருளிய அழகிய முத்துப்பந்தலில் திருஞான சம்பந்தர் காட்சியளித்து தேனுபுரீஸ்வரரை வந்து வழிபடல் காட்சியும், இரவு 8 மணிக்கு ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் முத்துவிமானத்தில் காட்சியளித்தல், சுவாமியுடன் திருஞானசம்பந்தர் முத்துப்பந்தலில் திருவீதி வலம் வருதல் நடைபெறுகிறது.