பதிவு செய்த நாள்
15
ஜூன்
2018
06:06
மோகனுார்: நாவலடியான் கருப்பண்ணசுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில், பக்தர்கள் குவிந்ததால், மோகனுார் குலுங்கியது. நாமக்கல் மாவட்டம், மோகனுார் நாவலடியான் கருப்பண்ணசுவாமி ராஜகோபுரம், விநாயகர், காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் கும்பாபி ஷேக விழா, நேற்று கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது.
இன்று காலை, 7:00 மணிக்கு, தீர்த்தக்குட ஊர்வலத்துக்காக, பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்றனர். அங்கு புனித நீராடிய பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். சிவன் கோவில் முன் உள்ள விநாயகர் கோவில், காளியம்மன் கோவில், தட்டாரத்தெரு, அரண்னை சாவடி விநாயகர் கோவில், கடைவீதி, மாரியம்மன் கோவில் வழியாக, நாவலடியான் கருண்ணப்பசுவாமி கோவிலை அடைந்தனர். இந்த ஊர்வலத்தில், யானையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மேலும், நாட்டு மாடு, குதிரை, ஒட்டகம் போன்றவையும் கலந்து கொண்டன. நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் வெள்ளம் காரணமாக, மோகனுார் நகரமே குலுங்கியது. தொடர்ந்து, கஜ, கோ மற்றும் அஸ்வபூஜை நடந்தது.