பதிவு செய்த நாள்
16
ஜூன்
2018
12:06
ஈரோடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வளர்க்கப்பட்ட, ஐந்து பசுமாடுகள், பழநி கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள கோசாலையில், ஐந்து சிந்து இன பசு மாடுகள் வளர்க்கப்பட்டன. இவற்றின் மூலமே, மூலவர் ஆருத்ர கபாலீஸ்வரர், வாரணாம்பிகையம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, பால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஐந்து பசுக்களிலும், பால் சுரக்கும் திறன் குறைந்தது. இதையடுத்து, பழநியில் உள்ள கோசாலைக்கு, நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து கோவில் பணியாளர்கள் கூறியதாவது: பழநி கோசாலையில், இந்த மாடுகள் முறையாக பராமரிக்கப்படும். இவற்றின் சாணத்தை பயன்படுத்தி, விபூதி தயாரிக்கப்படும். அனுப்பும் முன், அவற்றுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கால்நடை மருத்துவர் சான்றுடன், நேற்று காலை, கோபூஜை நடத்தி, அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது காங்கேயத்தில் இருந்து, புதிய நாட்டு மாடு, கோவிலுக்கு வாங்கி வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.