பதிவு செய்த நாள்
19
ஜூன்
2018
10:06
திருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், திருமலையில், ஆண்டுதோறும், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, மூன்று நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும், ஆனி திருமஞ்சனத்தை, தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, வரும், 24 - 26 வரை, திருமலையில் ஜேஷ்டாபிஷேகம் நடக்க உள்ளது.ஒருமுறை மட்டும் அதற்கு முன், ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசம் களையப்படுவது வழக்கம்.
தங்க கவசத்தை அகற்றி, அதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்கி, அதற்கு பூஜைகள் செய்து, மீண்டும் உற்சவமூர்த்திக்கு தேவஸ்தானம் அணிவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் அணிவிக்கப்படும் தங்க கவசம், ஆண்டில் ஒருமுறை மட்டுமே களையப்படுகிறது.அதன்படி, 19ல், உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டுள்ள தங்க கவசம் அகற்றப்பட உள்ளது. அதன்பின், அவை சரி செய்யப்பட்டு, 26ல், ஜேஷ்டாபிஷேக நிறைவு நாள் அன்று அணிவிக்கப்பட உள்ளது. அதுவரை உற்சவமூர்த்திகள் தங்க கவசம் இல்லாமல், தரிசனம் அளிக்க உள்ளனர். ஜேஷ்டாபிஷேகத்தின் முதல் நாள், வைர கவசத்திலும், இரண்டாம் நாள், முத்து கவசத்திலும், உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் வலம் வர உள்ளனர். ஜேஷ்டாபிஷேகம் நடக்க உள்ள நாட்களில், சில முக்கிய ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
பக்தர்கள் கூட்டம் : கோடை விடுமுறை முடிந்த பின்னும், வார இறுதி விடுமுறை நாட்களில், திருமலைக்கு, அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தர்ம தரிசன பக்தர்கள், 35 மணி நேரமும், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், 13 மணி நேரமும், ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். நேற்று, 2 கி.மீ., தொலைவு வரை தரிசன வரிசை நீண்டது.