பதிவு செய்த நாள்
19
ஜூன்
2018
11:06
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, வீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள கொண்டப்பநாயனப்பள்ளி கிராமத்தில் உள்ள வீரபத்திரசுவாமி மற்றும் தோட்டண்ணன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 16ல் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, கங்கை பூஜையுடன் தொடங்கியது. முதற்கால யாக பூஜை மற்றும் ஹோமங்கள் நடந்தது. பின்னர் சுவாமி சிலைக்கு பிம்பசுத்தி, ஜவாதிவாசம், தத்யாதிவாசம், தர்பாஸனம், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று முன்தினம் காலை கும்ப கலசம் புறப்படுதல் நிகழ்ச்சியும், வீரபத்திர சுவாமிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. விழாவையொட்டி தீபாராதனை, தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, தேவர்குட்டை பெருமாள் கோவில் சேவையாட்டம், கோலாட்டம், கரகாட்டம் ஆகியவை நடந்தன. நேற்று காலை பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பூசாரி ஆட்டின் தலை மீது தேங்காய் உடைத்து நிகழ்ச்சியை தொடங்கினார். பின்னர் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.