சபரிமலை: சபரிமலை விழாக்களில் யானைகளை பயன்படுத்த வேண்டும் என, தேவபிரஸ்னத்தில் கூறப்பட்டது. கேரளாவில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், சில ஆண்டுகளுக்கு முன், மகர விளக்கு சீசனில், மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளலுக்காக வந்த யானை மிரண்டு தாக்கியதில், ஒரு பெண் இறந்தார். இதனால், விழாக்களில் யானை பங்கேற்பது, தடை செய்யப்பட்டது. கடந்த பங்குனி உத்திர திருவிழாவின் போது, யானை மிரண்டு ஓடியதில் சுவாமி சிலையுடன் பூஜாரி கீழே விழுந்தார். இதனால் தேவபிரஸ்னம் நடத்த, தேவசம்போர்டு முடிவு செய்தது. பத்மனாபசர்மா தேவபிரஸ்னம் நடத்தி பலன்களை கூறினார்.
தேவபிரஸ்னத்தில் கூறப்பட்டதாவது: சபரிமலை விழாக்களில் யானைகள் பயன்படுத்த வேண்டும். சபரிமலை வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும். பொன்னம்பலமேட்டை சங்கல்பம் செய்து, சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும்.எல்லா மாதங்களிலும் மிருத்யுஞ்சய ஹோமம் நடத்த வேண்டும். பக்தர்களிடம் போலீஸ் மற்றும் தேவசம்போர்டு காவலர்கள் நல்ல அணுகுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு முடிவுகள் கூறப்பட்டன.