பதிவு செய்த நாள்
19
ஜூன்
2018
12:06
பித்தோரகார் : கைலாஷ் - மானசரோவர் புனிதப் பயணம் செல்லும் வழியில், மோசமான வானிலை நிலவுவதால், 57 பேர் அடங்கிய குழுவினர், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் வாயிலாக, பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர். இமயமலையில் அமைந்துள்ள, கைலாஷ் - மானசரோவர் புனிதப் பயணத்திற்கு, ஆண்டுதோறும், ஜூன் மாதம், பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த முறை, 57 பேர் அடங்கிய இரண்டாவது குழுவினர், தற்போது பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள், லகான்பூர் என்ற இடத்தில் இருந்து, நேற்று காலை, கஞ்ச் ராணுவ தளம் வரை, 18 கி.மீ., மலை ஏறிச் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. அங்கு, மோசமான வானிலை நிலவுகிறது. மேலும், இந்த நேரத்தில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதால், 57 பயணியரும், நான்கு விமானப்படை ஹெலிகாப்டர் வாயிலாக, லகான்பூரில் இருந்து, கஞ்ச் ராணுவ தளம் வரை, பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.