பதிவு செய்த நாள்
22
ஜூன்
2018
10:06
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை யொட்டி, தனுஷ்கோடி அருகே விபீஷணருக்கு பட்டாபிஷேக விழா நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜூன் 20 ல் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது.2ம் நாளான நேற்று, ராமர், சீதை, லட்சுமணர் பல்லக்கில் புறப்பாடாகி, தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் எழுந்தருளினர்.கோயில் குருக்கள் கூறியது,இலங்கையில் சீதையை விடுவிக்க ராவணன் தம்பி விபீஷணர் கூறியதும் ஆத்திரமடைந்த ராவணன், விபீஷணரை அவமரியாதை செய்தார். இதனால் விபீஷணர் சில அமைச்சர்களுடன் அடைக்கலம் தேடி தனுஷ்கோடி வந்தார்.அப்போது சீதையை மீட்க ராமர், லெட்சுமணர், அனுமனுடன் ஆலோசித்த போது, ராவணனின் உளவாளி விபீஷணர் வருகிறார் என அனுமன் கூறுகிறார். உடனே ராமர், அடைக்கலம் தேடி வருவோரை பாதுகாப்பது தான் தர்மம் எனக் கூறி, கடல் நீரை அள்ளி வரும்படி லட்சுமணருக்கு உத்தரவிடுகிறார். இதன் பின் இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து, அவருக்கு ராமர் புனித நீரை ஊற்றி பட்டாபிஷேகம் சூட்டுகிறார் என தெரிவித்தார்.இந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக நேற்று தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் குருக்கள், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டினர். இதன் பின் நடந்த மகா தீபாராதனையில் கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் பங்கேற்றனர்