பதிவு செய்த நாள்
22
ஜூன்
2018
10:06
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன உற்சவத்தில் நேற்று, தில்லை அம்பலத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த நடனமாடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம், கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, இரவு நடராஜர் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் திருத்தேரில் இருந்து இறங்கி, ஆயிரங்கால் மண்டபம் முகப்பு ராஜ சபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு லட்சார்ச்சனை நடந்தது.
நேற்று அதிகாலை 3:00 மணியளவில், சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின், ராஜ அலங்காரத்தில் ஆயிரங்கால் உள் மண்டபத்தில் எழுந்தருaளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொது தீட்சிதர்கள் சித்சபையில் ரகசிய பூஜை செய்தனர். மதியம் 1:15 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்து, 2:15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் முன்பு எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது. பிற்பகல் 2:55 மணியளவில், ராஜ சபையில் இருந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் புறப்பாடாகி, ஆனந்த நடனமாடியவாறு தில்லையம்பலத்தில் பக்தர்களுக்கு மகா தரிசனம் தந்து, சித்சபை பிரவேசம் செய்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ‘பொன்னம்பலத்தானே; ஆடல் வல்லானே; தில்லை அம்பலத்தானே’ என கோஷம் எழுப்பி, சுவாமி தரிசனம் செய்தனர்.