பதிவு செய்த நாள்
22
ஜூன்
2018
11:06
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலுக்கு, படி வழியாக திருமஞ்சன தீர்த்தக்குடம் கொண்டு செல்ல, புதிய பொதிகாளைக்கு, நேற்று பயிற்சி கொடுத்தனர். துள்ளி குதித்து சென்றதை பார்த்து, பக்தர்கள் பரவசமடைந்தனர்.
சென்னிமலை முருகன் கோவிலுக்கு, மலை அடிவாரத்தில் உள்ள, தீர்த்த கிணற்றில் இருந்து, காலை, 8:00 மணி பூஜைக்கு, பொதி காளை மூலம், 1,320 படிக்கட்டுகள் வழியாக, தீர்த்தக்குடங்கள் கொண்டு செல்வது வழக்கம். காலை, 7:00 மணிக்கு தீர்த்தம் எடுத்து, பொதி காளை மீது வைக்கப்பட்ட, மூங்கில் கூடையில் வைத்து, கோவில் பணியாளர்கள் மாட்டினை ஓட்டி செல்வர். இதற்காக கோசலையில் இரண்டு பொதிகாளை பராமரிக்கப்படுகிறது. இதில் ஒரு மாட்டுக்கு வயதாகி விட்டதால் சிரமப்படுகிறது. இதனால் கோசாலையில், பராமரிக்கப்படும் இளம் காளைக்கு பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனி உத்திர தரிசனத்தினை முன்னிட்டு, நேற்று பயிற்சி தொடங்கியது. வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன், புதிய மாடு பிடித்துச் செல்லப்பட்டது. வழக்கமாக புது மாடு மிரண்டு பயப்படும்; படியிலும் ஏறாது. ஆனால், இந்தக் காளையோ, பயிற்சி பெற்றதுபோல், படிகளில் சாதாரணமாக ஏறிச் சென்றது. சில இடங்களில், இரண்டு படியாக தாவிச் சென்றது. தரிசனத்துக்கு வந்த பக்தர்கள், இதை பார்த்து மெய் சிலிர்த்தனர். காளைக்கு சிங்காரவேலன் என பெயர் சூட்டியுள்ளனர். பெருந்துறை எம்.எல்.ஏ., வெங்கடாசலம், தானமாக கொடுத்த, காளை என்பது குறிப்பிடத்தக்கது.