பதிவு செய்த நாள்
23
ஜூன்
2018
10:06
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவில் தேர், 3 மணி நேர போராட்டத்திற்கு பின், ஷெட்டில் நிலை நிறுத்தப்பட்டது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை, வடிவுடையம்மன் கோவில் பிரசித்து பெற்றது. இக்கோவிலுக்கு, 1941க்கு பின், தேரோட்டம் நடக்கவில்லை. 75 ஆண்டுகளுக்கு பின், 2015ல், 46 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் செய்யப்பட்டது.கடந்த, மூன்று ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது. கோவில் கோபுரம் அருகே நிறுத்தப்பட்டிருந்த தேர், தார்பாயால் மூடி வைப்பதால், மழை, வெயிலில் சேதமடைவதாக, பக்தர்கள் குற்றம் சாட்டினர்.கடந்தாண்டு, கோவில் குளக்கரை அருகே, 26 லட்சம் ரூபாய் செலவில், தேருக்கான, ஷெட் அமைக்கப்பட்டது. நேற்று காலை தேரை, ஷெட்டில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேரை, ஜே.சி.பி., இயந்திரத்தால், நகர்த்தும் பணி, காலை, 8:00 மணிக்கு துவங்கியது. ஷெட்டிற்குள் ஏற்றுவதற்கு, சாய்வு தளம் ஏதும் அமைக்கப்படாததால், தேரை ஏற்ற முடியவில்லை. மூன்று மணி நேரத்திற்கு பின், கூடுதலாக, ஜே.சி.பி., இயந்திரம் வரவழைக்கப்பட்டு, தேர் நிலை நிறுத்தப்பட்டது.