அருப்புக்கோட்டை: விடுமுறை என்றாலே சுற்றுலா சென்று வருவது இயல்பு. சனி, ஞாயிறு விடுமுறை என்றாலே அருகில் உள்ள கோயில், பூங்கா அல்லது ‘அவுட்டிங்’ சென்று வருவது வழக்கம். அருப்புக்கோட்டையில் இதுபோன்ற பொழுது போக்கு இடங்கள் எதுவும் இல்லை. இதை தீர்க்கும் விதமாக அருப்புக்கோட்டையில் ‘மினி பிக்னிக் ஸ்பாட் ’ஆக, குளு குளு மரங்கள் சூழ்ந்து குளிர்ச்சியோடு உள்ளது மலையரசன் கோயில்.அருப்புக்கோட்டை தென் மேற்கு பகுதியில் உள்ள சிறிய மலை குன்றில் தான் இக்கோயில் உள்ளது. கோயிலின் கீழ் நித்தியானந்த சுவாமி மலையரசன் சுயம்புவாக தோன்றி அருள்பாலித்து வருகிறார்.
மலையின் மேல் நுாறு ஆண்டுகள் புகழ் வாய்ந்த கம்பத்து சீனி வாசக பெருமாள் கோயில் உள்ளது. மலையின் மேல் இருந்து பார்த்தால் நகரை முழுமையாக பார்க்கலாம். கோயிலில் லட்சுமி நாராயணர், சூரிய நாராயணர் சன்னதிகள் உள்ளன. மலையின் மீது சென்று வர படிக்கட்டுகளும் உள்ளன.
படியேறும் இடத்தின் இருபுறமும் பெரிய கற்பாறைகள் உள்ளன. இவற்றில் செதுக்கப்பட்டுள்ள கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் சிற்பங்கள் கண்களை கவர்கின்றன. குழல் ஊதும் கண்ணன் பசுவுடன் நின்ற நிலையில் உள்ளார்.. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள யானை சிலை பார்ப்போரை கவர்கிறது. கோயில் வளாகத்தை சுற்றி நிழல் தரும் மரங்களும் வளர்க்கப்பட்டுள்ளன. இங்கு கிரி வலப் பாதை அமைக்கப்பட்டுள்ளதால், மாலை மற்றும் காலை நேரங்களில் நடைபயிற்சி செய்ய ஏராளமானோர் வருவர். உட்கார ஆங்காங்கு நடை மேடைகள் வேறு உள்ளது. குளு குளுவென இப்பகுதி இருப்பதால் நகரின் மினி ‘பிக்னிக் ஸ்பாட்’ ஆக உள்ளது. இங்கு வேதாந்த ஞான சபை தியான அரங்கமும் உள்ளது. இதில் வேதாந்த வகுப்புகள், சத்சங்கம், கலந்துரையாடல், தியானம் என பல நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகிறது. ஆன்மிகம் மற்றும் மினி சுற்றுலா தலைமாக மலையரசன் கோயில் பகுதி உள்ளதால் , ஒரே நாளில் ஆன்மிக சுற்றுலாவாக இங்கு வந்து அனுபவிக்கலாம்.