பதிவு செய்த நாள்
25
ஜூன்
2018
11:06
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே நடந்த, அக்னி வசந்த விழாவில், 150 அடி நீள துரியோதனன் சிலை படுகளம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த, தேவிகாபுரத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த, 14ல், அக்னி வசந்த விழா துவங்கியது. இதை முன்னிட்டு, மகாபாரத சொற்பொழிவு மற்றும் பாஞ்சாலியம்மன் கட்டை கூத்து குழுவினரின் நாடகமும் நடந்து வந்தது. நேற்று காலை, ஆலய வளாகத்தின் முன், 150 அடி நீள துரியோதனன் சிலை அமைத்து, பீமன், - துரியோதனன் போரில் ஈடுபட்டு, துரியோதனனை படுகளம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.