பெரியகுளம் : பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்க உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. காசிக்கு அடுத்தப் படியாக, வராகநதி கரையோரத்தில் இருபுறங்களிலும் ஆண், பெண் மருதமரங்கள் அமைந்திருப்பது கோயிலின் சிறப்பம்சம். 2013ல் கோயிலில் திருப்பணி துவங்கியது. 72 அடி உயரத்துடன் ஐந்து நிலை ராஜகோபுரம் புதிததாக அமைக்கப்பட்டுள்ளது.
அறம் வளர்த்தநாயகி, ராஜேந்திரசோழீஸ்வரர், பாலசுப்பிரமணியர் சன்னதிகளுக்கு புதிதாக மூன்று கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கன்னிமூல கணபதி, லட்சுமி, சரஸ்வதி, சுப்பிரமணியர், சண்டீகேஸ்வரர்,தண்டாயுதபாணி, துர்க்கை, நடராஜர், பைரவர், நாயன்மார்கள், நாகர், பஞ்சலிங்கம், நவக்கிரஹம், உட்பட 157 சாமி சிலைகளும், துாண்களும் பழமை மாறாமல் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ளது. கடந்த, ஜூன் 22ல் இருந்து யாகசாலை பூஜைகள் துவங்கியது. மகாகணபதி ஹோமம், தனபூஜை ஆகியவை முன்று நாட்கள் நடந்தது. இன்று (ஜூன் 25ல்) காலை 9:05 முதல்9:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகர் ராஜாபட்டர்கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். திருப்பணிகளை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், திருப்பணிக்குழு உறுப்பினர்கள் சசிதரன், சிதம்பரசூரியவேலு, ஓ.ராஜா, நாகராஜ், பாண்டியராஜ், டாக்டர் செல்வராஜ் மற்றும் தேனி மாவட்ட அ.தி.மு.க.,அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் ரவீந்திரநாத்குமார், கைலாசநாதர் கோயில் அன்பர் பணி செய்யும் பராமரிப்புக்குழுத் தலைவர் ஜெயபிரதீப் ஆகியோர் செய்து வருகின்றனர்.--