பதிவு செய்த நாள்
02
ஜூலை
2018
11:07
திருப்போரூர்: கண்ணகப்பட்டு, திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட, கண்ணகப்பட்டில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஜூன், 13ம் தேதி அக்னி வசந்த உற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு, தினமும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும், இரவில் வீதியுலாவும் நடைபெற்றது. மேலும், கோவில் வளாகத்தில், பிற்பகலில் மகாபாரத சொற்பொழிவும், இரவில் பாரத கூத்தும் நடைபெற்றது. இந்நிலையில், 18ம் நாளான நேற்று காலை, 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்தனர். படுகளம் நிகழ்ச்சி ஏராளமானோர் பங்கேற்றனர். சுற்று வட்டார பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.