பதிவு செய்த நாள்
23
ஜன
2012
11:01
ஆழ்வார்குறிச்சி :ஆழ்வார்குறிச்சியில் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாளுக்கு தெப்ப திருவிழா வரும் 29ம் தேதி கால்நாட்டுதல் வைபவத்துடன் துவங்குகிறது. சிவசைலத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ள புகழ்பெற்ற சிவஸ்தலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயிலாகும். சுவாமிக்கும், அம்பாளுக்கும் ஆழ்வார்குறிச்சி நகர வியாபாரிகள் சங்கத்தினர் பொதுமக்களுடன் இணைந்து ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப திருவிழாவை நடத்துவார்கள். இந்த ஆண்டு 18வது தெப்ப திருவிழா வரும் 29ம் தேதி காலை 9.30 மணியளவில் கால்நாட்டுதல் வைபவத்துடன் துவங்குகிறது. அதனை தொடர்ந்து வரும் பிப்.6ம் தேதி இரவு சிவசைலத்தில் இருந்து சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் ஆழ்வார்குறிச்சி தெப்ப திருக்குள விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளுகிறார். சுவாமி அம்பாளுக்கு ஊர் முகப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிப்.7ம் தேதி விளா பூஜை அபிஷேகமும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் கேடயத்தில் விநாயகர் கோயிலிலிருந்து தர்மபுர ஆதீன மடத்திற்கு எழுந்தருளல் நடக்கிறது. பின்னர் உச்சிக்கால அபிஷேகமும், விசேஷ அலங்காரத்துடன் கூடிய பூஜையும் நடக்கிறது. மாலை சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் சுவாமி, அம்பாள் தர்மபுரம் ஆதீன மடத்தில் இருந்து கேடயத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளுகின்றனர். சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாளும் 11 சுற்று வலம் வருதலும், பின்னர் சிறப்பு வாணவேடிக்கையுடன் திருக்குளம் வீதி வரும்போது பெரியதளவாய் மாடசாமிக்கு காட்சியளித்தல் வைபவமும் நடக்கிறது. விழாவில் கட்டியம், வேதபாராயணம், தேவார பன்னிசை ஆகியன நடக்கிறது.
பிப்.8ம் தேதி சுவாமி, அம்பாள் அதிகாலையில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆழ்வார்குறிச்சி நகர வீதியுலா நடக்கிறது. பின்னர் ரிஷப வாகனத்தில் இருந்து சுவாமி இறங்கும் போது இரண்டு சிவாச்சாரியார்கள் வைதீக கோலத்துடன் ரெட்டை சோடசோபசார தீபாராதனை நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் ருத்ர ஹோமம், ருத்ர ஏகாதசி, விசேஷ அபிஷேகம், சிறப்பு தீபாராதனையும், இரவு 8 மணிக்கு மேல் தர்மபுர ஆதீன மடத்திலிருந்து சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளலும், கோயில் சேர்ந்த பின்னர் அபிஷேக தீபாராதனையும் நடக்கிறது. தெப்ப திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளாக பிப்.6ம் தேதி இரவு 9 மணியளவில் திருவனந்தபுரம் சதீஷ்குமாரின் செண்டை மேள கச்சேரியும், தெப்ப திருநாளன்று மாலை 6 மணிக்கு முக்கூடல் ஒ.கே.சி.என். வெங்கடேஷ் குழுவினரின் கிளாரினெட் கச்சேரியும் நடக்கிறது. இரவு பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் 2011ம் ஆண்டு 10, 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும், பின்னர் ரிதம் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டி நிரந்தர தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி, ஆய்வாளர் சுப்புலெட்சுமி, செயல் அலுவலர் முருகன் மேற்பார்வையில் வியாபாரிகள் சங்கத்தினர், தெப்ப உற்சவ கமிட்டியினர், கட்டளைதாரர்கள், பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.