காட்டேரிக்குப்பம்: காட்டேரிக்குப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அஷ்டலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காட்டேரிக்குப்பம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சுந்தரநாயகி உடனுறை அஷ்டலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி கணபதி ஹோமம், கோ-பூஜையுடன் துவங்கியது. இதனையொட்டி, நேற்று முன்தினம் (7ம் தேதி) வாஸ்து சாந்தி, அஷ்டலிங்கேஸ்வரருக்கு முதல் கால வேள்வி பூஜை, திருமுறை விண்ணப்பன், யாக சாலை, வேள்வி நிறைவு நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை துவங்கியது. திருமுறை ஓதுதல், காலை 9:15 மணிக்கு வேள்வி நிறைவு, வேண்டுதல் விண்ணப்பம் பேரொளி வழிபாடு, காலை 9:45 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு அஷ்டலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.