மதுரை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரம் கோயில்களில் பக்தர்கள் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், சன்னதிகளில் தீபம் ஏற்ற தடை விதித்து அறநிலைத்துறை கமிஷனர் ஜெயா உத்தரவிட்டுள்ளார். சனி பகவானுக்கு எள் விளக்கு ஏற்ற தடை இல்லை. கோயிலின் மூலவருக்கு தீப வழிபாடு அர்ச்சகரால் வழக்கம் போல் நடக்கும். கோயில்களில் முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்துவர். இந்த உத்தரவால் அது தடைப்பட்டுள்ளது.கோயில்களில் விளக்கு ஏற்றுவது காலம் காலமாக தொடரும் ஐதீகம். இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் முதன்மையானது விளக்கு. பல பண்டிகைகள் தீபத்தை அடிப்படையாக கொண்டவையே. வேண்டுதல் நிறைவேறவும், துன்பங்கள் தீரவும் கோயிலில் விளக்கு ஏற்றினால் போதும் என நினைக்கின்றனர்.இந்நிலையில், விளக்குக்கு தடை விதிப்பது, பக்தர்களின் வேண்டுதலுக்கு தடை விதிப்பதாகவே கருத வேண்டும். பல இடங்களில் விளக்கு ஏற்றுவதை தவிர்த்து குறிப்பிட்ட சில இடங்களில் ஏற்ற வழி செய்யலாம். உரிய பாதுகாப்பு வழி முறைகளை செய்ய முடியாத அறநிலையத்துறை, விளக்குக்கு தடை விதிப்பது வேதனை அளிக்கிறது என்கின்றனர் பக்தர்கள்.